Tuesday, April 10, 2012

கண்ணகிக்கோர் காணிக்கை.. ( கவியரங்கக் கவிதை )

கண்ணகிக்கோர் காணிக்கை..

தமிழ்வணக்கம்

தன்னில் இருந்து தரணிக்கெலாம் கருவளித்து
கருச்சிதைக்க வந்தோர்க்கும் உந்தன்
உருச்சிதைக்க நினைத்தோர்க்கும் 
ஒவ்வாத கனவதுவாய்
மாண்பதனில் மேன்மையளாய்
சால்பினில் மேருவதாய்
தான்சிறந்த தலைமகளே..
வான்சிறக்க உதவிடும்
மானமிகு மாமழையே..
கற்புத்திறனழியா காரிகையே
வேற்றுமொழி கொஞ்சம் 
மாற்றாய்க் கலந்தாலும் 
தன்னிலையில் தவறாத
கன்னியவளே 
தமிழே வணக்கம்..!

அவைத்தலைவர் வணக்கம்.

அன்புக்கும் பண்புக்கும் பணிவுக்கும் 
பொறுமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும்
குறும்புக்கும் கருத்துக்கும் 
குவிந்ததோர் புலமைக்கும்
உவமையாய் பலநேரம்
உவமேயமாயும் திகழ்கின்ற
ஔவையாம் அவைத்தலைவியை
அவைசிறக்க வணங்குகிறேன்..!

கண்ணகி ‍ என்கற்புப்பார்வையில்..

கற்புத்திறன்களால் காவியளானாய்
இன்றுவரை பெண்களுக்கு
மேவியளானாய்..
கண்ணகியே உந்தனுக்கு
என் 
கவிதை வணக்கம்..

அன்றொரு நாளுந்தன் கணவனவன் சற்றேயுன்
முன்றானை முடிச்சதனில் வீழ்ந்திடா பிழையதனால்
சென்றானே உனைத்துறந்து உன்குற்றம் தானென்பேன்..
என்றாலும் பின்னும்நான் தீவிரமாய் யோசித்தேன்.

இன்னும் யோசித்தால் உந்தன் மணமதுவோ
பின்னும் யோசியாமல் செய்துவைத்த பாவைமணம்.
ஒன்னும் அறியாத பேதைநீ..பாவிகளின்
துன்னும் குற்றமதாம் துரிதமாய துன்மணமே..

பனிரெண்டு வயதினிலே மான்போல் ஓடிநிதம்
இனிதாக விளையாடும் பேழைச் சிலையன்றோ 
தனிமை யறியாத தனியவளே உன்மணம்
கனியாத பருவமதில் செய்தது அவர்குற்றம்..

கணவனுக்கு காமமது ஊற்றிட உன்கையில் 
தணவதுவாய் ஏந்திய பருவப்பாத்திரம் தான்
குணமதில் குழந்தையாம் உன்கையில் ஏதுமில்லை
மணமுள்ள மலர்தேடும் வண்டினமாய் மாறினனே..!

உந்தன் குறைஅவனை உந்திய தால்தானோ
முந்தானை விட்டவனும் மாதவியின் சிற்றாடை
கந்தமா யுணர்ந்தவனைக் கண்டியாது விட்டொழித்தாய்..
அந்தப் பிழையுனது சுட்டதுவே கூடலினை..

காமத் தீயதுவை எதிர்கால முந்தனுக்கு
மூட்டிய போதினில் மூழ்கிவிட்டான் மாதவியில்
சாமத்தில் பொருளிழந்து சன்னத மிழந்தவனை
கோபத்தில் எரியாது காத்திட்ட காரிகை நீ..!

வேசத்தாள் விட்டொழிந்து வேகங்குறைந் தவன்தான்
மாசறு பொன்னெனவும் காசறு விரையெனவும்
மோசடியாய்ப் புகழ்ந்தவனை முற்றுமாய் ஏற்றனைநீ
மாசம் ஆறினுக்குள் மண்ணடியில் போய்மறைந்தான்.

பருவம் வந்தறியாப் போதினிலும் பின்னர் 
அருவக் காமனவன் வந்தணைத்த போதினிலும்
உருவம் இழக்கவில்லை கருவும் ஏந்தவில்லை
கருவதனை ஏந்திடவும் ஏதும் நடக்கவில்லை.

உன்னை எண்ணினால் வியப்பே வந்துதிக்கும்
பொன்னை ஒத்தாற்போல் இருந்தனை அந்நாளில்
என்னை நினைத்தனனோ ஏந்திழையாள் உன்னைவிட்டு
முன்னம் மாதவியும் பின்னர் மரணமதும் 

கொண்டேகி ஒழிந்தனனே கோவலன் ஆயினன்கொல்
பண்டை ஊழதுவால் கேவலன னாய்மடிந்தான் 
தண்டைச் சிலம்பதுவும் தப்பாகிப் பிழைத்திருக்க
மண்டபத்தில் மாதுஅவள் மையலில் பாண்டியனும்.

பட்டறியாக் காமத் தீயதுவால் உன்னொற்றை 
தொட்டறியா அமுததனம் அழுதகணம் தீயதுவாய்
பட்டினைப் பெருந்தீ பற்றியது போலன்றோ
விட்டெறிந்த உன்முலைதான் கூடலுக்கு எரியாச்சு.

பொற்குழலாள் போதைதரும் பொன்மயிலாள் மாதவியும்
தற்கணவன் தவறியதால் மாண்டகோப் பெருந்தேவியும்
கற்பினில் சிறந்தவரே ஐயமேது மிலைஎனினும்
தற்காத்துக் கொண்டாய்நீ கற்பினுக் கணியே நீ..!

முடிந்துரை மொழி

கண்ணகிக்காய் வாதாடி கவிதைகள் எழுதுவதோ
கண்ணிமைக்கும் நெரத்தில் கைகூடும் எவருக்கும்
எண்ணத்தில் எனக்குள் எழுந்தல ஐயங்கள்
திண்ணமாய் எழுதிடவே இவ்வாய்ப்பைப் பெற்றேன்யான்.

எந்தன் உளறலில் எள்ளளவும் பிழையிருப்பின்
இந்த அவையாரும் தலைமை அவ்வையரும்
முந்தியே மன்னித்துப் பொறுத்திடவே வேண்டுகிறேன்
தந்த வாய்ப்புக்கும் நன்றிகூறி அமர்கின்றேன்..!

ஏங்க வைத்த பொற்காலம்..!

படம்

ஏங்க வைத்த பொற்காலம்..!

சற்றே முகம் நோக்கி 
முறுவலிக்கும் போதினிலென்
நெற்றிமேல் விழுந்த 
கற்றைக்குழல் விலக்கி நீயும்
பற்றோடு பரிந்து தந்த 
பகல் முத்தம் மீள் வருமோ...?

சற்றேனும் சிணுங்கி விட்டால்
சட்டெனத்தாவியே 
ஒற்றைமுலையில் வெகுவிரைவில் 
மூச்சடைக்க முட்டவைத்து 
நீதந்த முலையமுதும் 
மறந்திடுமோ என் வாயும்..?

கூன் விழுந்து குனிந்து நீயும் 
தரைதடவிப் பார்க்கையிலே 
யான் விழுந்து மருளுகின்றேன்
தாயுன்னைக் காண்கின்றேன்
அடிவயிறும் கலங்குதம்மா..!

நானிழந்த உன் பாசம் 
தேனிழந்த ஈக்களைப்போல்
மேன்மேலும் ஏங்கவைத்து 
ஊனிழக்க வைத்து உனை
உருக்குலைந்து பார்க்கையிலே
குலைநடுங்கிப் போகுதம்மா..

உன்நினைவை நீயிழந்து
சுயசிந்தனையும் இழந்து
எங்கோ வெறித்திருக்கும் 
உன்முகம் பர்ர்க்கையிலே
எங்கோ வழிதவறிக் 
காட்டிடை புகுந்துவிட்ட 
குழந்தையாய் தவிக்கின்றேன்..

தங்கமாய் நீஎன்னைத் 
தாங்கித் தழுவிநிதம்
பள்ளிக்கு அனுப்பிவைத்த
பொற்காலம் மின்னுதம்மா ...
தற்காலம் உன் மனது 
கற்சிலை யாய் ஆனதம்மா..

மின்னசைக்கும் ஒருபோதில்
கண்ணசைத்தே கடிதினில்
உன்வசம் நீமீண்டு 
ஓடிவந்து தாவிஎனை
அணைத்திட மாட்டாயா
ஆருயிர் அன்னைநீயே..!

கலைவேந்தனின் ஹைக்கூவல்கள்..!

1. இதிகாசங்கள்

நால்வகை வர்ண
வானவில்லால்
தலைகொய்த பரிகாசங்கள்.

2.ஒரு சீதையின் ஒப்புதல் கடிதம்.

உனக்கான தீக்குளியல்களை மறுதலிக்கவில்லை
ஊருக்கான தீக்குளியல் அவசியமே இல்லை
இப்படிக்கு சீதை.

3. நியூட்டனும் விதியும்.

கீழே விழும் ஆப்பிளில்
நியூட்டனின் விதி தெரியவில்லை.
வயிற்றுப்பசி.

4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

6. நிதர்சன‌ங்கள் 

உண்மை பொய் 
முறையே
தூற்றப்படும் போற்றப்படும்.

7. மூவர்ணம்.

வெண்சிரிப்பு
கருப்பு மனம்
காவியுடை.

8. சீதையின் வாக்குமூலம்

தீக்குளியல் 
உனக்காய் மட்டுமே
ஊருக்கல்ல..

9.தற்கொலை

கலையும் மேகங்கள்..
மின்னல் கயிறு..
தூக்கில் தொங்கியது நிலா.

10. நிரந்தரம்.

மேகக்கூட்டத்தில் 
யானை உருவம்..
எக்களித்தது குழந்தை.

11.வரவேற்பு

ஒளிக்கம்பளம் விரித்து
விட்டிலை வரவேற்றது
தீப்பந்தம்.

12. பெண்கள்

ஆண்கள் ஆச்சரியக்குறி ஆக‌
கேள்விக்குறியாய் 
ஆனவர்கள்.

13. பத்தினி

கெடுக்க நினைக்கும் 
கணவனுக்கும்
கொடுக்க மறுக்காதவள்

14. விதவை

நாக்கில் நீர்சொட்டும்
குரங்குகளுக்கு
எட்டாத தேனடை.

15. மனைவி

அடக்கிய கணவனை
முடக்க விடாமல் 
தாங்குபவள்.

16.ஞானம்..

காதல் ‘கத்திரி’க்காய்
பிரிவு ‘புண்’ணாக்கு
போங்கடா

17.புதிய பாரதம்:1

துச்சாதனன்கள் திருந்திவிட்டனர்
பாஞ்சாலிகளின் 
மறு பரிசீலனை.

18. புதிய பாரதம்:2

கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.

19. புதிய பாரதம்:3

நல்லவேளை ..
குந்திக்கு 
ஐந்தே மகன்கள்..

20. புதிய பாரதம்: 4

மாது சிரித்ததால்
சூது சிரித்தது
மானம் போனது..
21. புதிய பாரதம்: 5

சுதர்சன சக்கரம் போல் 
எங்கள் பாட்டி 
முறுக்கு சுடுவாள்..

22. சும்மாச் சும்மா : 1

வளைந்து நெளியும்போதே
கண்டுபிடித்துவிடுகிறேன்
உன் பொய்களை.

23. சும்மாச் சும்மா : 2

அவிழ்ந்த கூந்தலில்
சில நரைமுடிகள்
மின்னல்..

24. சும்மாச் சும்மா : 3

அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.

25. சும்மாச் சும்மா : 4

நேரம்..
கத்தியால் குத்தியது
அவனது நிழல்.

26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!

27. புதிய பாரதம்:6

ஆறாவதாய் 
பாஞ்சாலி விரும்பியதால் 
கர்ணனின் அகால மரணம்.

28. புதிய சிலம்பு :1

ஒற்றை எறிவில் மதுரை 
மற்றையது 
எவ்வூருக்காய்..?

29. புதிய சிலம்பு : 2

இன்று
மாதவிக்கும் கேவலமாய்
கோவலன் மனைவி.

30.காமம்.

இழுத்த இழுப்புக்கு
வளைந்து கொடுக்கும்
தேய் பிறை

31. கடவுள்

எத்தனை தாரமும் 
சம்மதம் என்னும்
’முற்றும்’ துறந்தவன்.

32. பக்தி

முட்டாள்களாக்க 
சமாளிக்கும்
யுக்தி

33. பயணம்

உயிர் என்பது 
ஒருதுளி விந்தின்
நீள் யாத்திரை



34. குழப்பம்.

எரிக்கவேண்டுமா புதைக்கவேண்டுமா..?
தீயில் கருகிச்செத்தவனின்
உறவினர் குழப்பம்.

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும்போது
ஒருகுழந்தை 
வெட்கப்படுகிறது..

ஒரு காதலி
கால் மண் துழாவுகிறாள்..

ஒரு மாணவன்
உறுதி எடுக்கிறான்
இன்னும் உழைப்பேனென்று..

ஒரு மனைவி
இன்னும் சுவையாக சமைக்கிறாள்.

ஒரு நண்பன் 
வசமிழக்கிறான்..

ஒரு எதிரி
அடிமை ஆகிறான்..

ஒரு ஞானி 
துறவு இழக்கிறான்..

ஒரு கவிஞன் 
கர்வமடைகிறான்
இன்னும் அதிகமாய்
கர்ப்பமடைகிறான்..

பாராட்டப்படும் போது 
பூக்கள் கூட மேலும் 
மணக்கின்றன..

ஒரு பசு இன்னும் 
அதிகமாய்ச் 
சுரந்து பீய்ச்சுகிறது..

ஒரு கைதி 
உணரத் தொடங்குகிறான்..

ஒரு கணவன் 
பாராட்டப்படும்போது 
மேலும் 
காமுறுகிறான்..

பாராட்டப்படுகையில் 
ஒரு தாய் 
புன்னகைக்கிறாள்..

பாராட்டுவதால் 
பலவித பயன்களுண்டு..

பாராட்டுங்கள்..
பாசம் கிடைக்கும்..

பாராட்டுங்கள்..
உலகம் உங்கள் வசம்..!!

நீ நலமா..?

படம்

நீ நலமா..?

நலமா..?

உடலற்ற உயிராய் நீ..
நலமா..?

மணமிழந்த மலராய் நீ..
நலமா..?

விழியற்ற ஓவியமாய் நீ..
நலமா..?

கருவற்ற கவிதையாய் நீ..
நலமா..?


நான் இங்கு 
நலமில்லை..!

நாணில்லா வில்லாய் நான்..
நலமில்லை..!

நீரில்லா குளமாய் நான்..
நலமில்லை..!

வேரில்லா மரமாய் நான்..
நலமில்லை..!

இரையில்லா மானாய் நான்..
நலமில்லை..!

நீயின்றி நான் நலமில்லை..
நலமின்றி நீ.. நான் நலமில்லை..


பின்
உன் பிடிவாதம்
உன் ஆக்ரோஷம்..
உன் அறியாமை..
இவை மட்டும் நலமெப்படி..?

தோற்றுவிட்டேன்..

தோற்றுவிட்டேன்..

படம்


வாழ்க்கைக்கும் வாய்ப்புக்கும் 
இடையில் நடந்த போரில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாய்மைக்கும் பொய்மைக்கும் 
நடந்த வழக்கில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்.

புரிதலுக்கும் முரிதலுக்கும் 
இடையிலான இழுவையில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சமாதானத்துக்கும் சாகசத்துக்கும் 
இடையிலான தீயில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சாமிக்கும் சாத்தானுக்குமிடையில்
இழுத்த பிரச்சினையில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாக்குவன்மைக்கும் வாய்ச்சாடலுக்கும் 
மத்தியிலான விவாதத்தில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

தன்னம்பிக்கைக்கும் தற்கொலைக்குமான 
இழுபறிப் போராட்டத்தில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

இனியாவது..

வாய்ப்பில்லா வாழ்க்கையும்
பொய்மையற்ற வாய்மையும்
முரிதலில்லா புரிதலும்
சாகசமில்லா சமாதானமும்
சாத்தானில்லா சாமியும்
வாய்ச்சாடலில்லா வாக்குவன்மையும்
தற்கொலையில்லாத த‌ன்னம்பிக்கையும்

நானின்றி
என் பேரின்றி
என் அடையாளமின்றி
என் இடையூறுகளின்றி

வெற்றிபெறட்டும்..

ஆமென்..