தேர்தல் வருது... தேர்தல் வருது...!
யானைகள் அம்பாரிகள் சேனைகள் பவனிங்க...
கால் வழுக்கும் மைதாப்பசையில் கொஞ்சம் கவனிங்க..
நிறையபேரு வருவாக இனி..
நிறையும் கொஞ்ச நாள் வயிறும் இனி...
எத்தனை பேரு வந்தாலும் செருப்பு தைப்பவர்
அடுப்பில் நெருப்பு எரியுமா சொல்லுங்க..!
ஒட்டி நிக்கும் எங்க வயிறு கெட்டியாகி நிறையுமா...?
சட்டி சோறும் கட்டிக்க துணியும் காலங்காலம் நிலைக்குமா..?
இலவசங்கள் எங்களை ஆக்கலையே பரவசங்கள்..
அடுப்பில் நிக்கலையே பூனைகளின் பிரசவங்கள்...
விடியும் என்று தான் சொல்லிச் சொல்லி போறாங்க
இடியும் நிக்கலை மழையும் நிக்கலையே...!
டி வி தந்த மவராசன் எங்க சொந்தங்களின்
டி பி போக்கலையே...சாவும் நிக்கலையே...!
பலபேரு பலவிதமா பரவசமா பேசுறாங்க...
பொலபொலன்னு கண்ணீரு ... கேக்க நல்லா இருக்குங்க...
வானம் பாத்த பூமிக்கு வழிவகை செய்தாக்கா
மானம் காக்க எங்களுக்கும் வழி பிறக்கும் யோசிங்க...
மணலைக்கூட கயிறா திரிப்போம்னு சொன்னாங்க..
மழலைக்கு எதிகாலம் என்னன்னு சொல்லலையே..
வெங்காயம்னாங்க விலைவாசின்னாங்க நல்லாத்தான் சொன்னாங்க...
எங்க காயம் என்னன்னு விவரம் தெரியாம போனாங்க...
உங்க காரியம் முடிஞ்சாக்கா ஒருவேளை ஜெயிச்சாக்கா
எங்க காரியத்தை கொஞ்சம் ஓய்வால கவனிங்க...
தெருவோடு பாலாறு .. இது எல்லாம் வேண்டாங்க..
கருவாடு கடிச்சுக்க கலய கஞ்சி போதுமுங்க..
எங்க ஓட்டு தானே வேணும்... தாராளமா எடுத்துக்கோங்க...
ஆனா ஓட்டுக்கு நீங்க தரும் திருவோடுமட்டும் வேண்டாங்க...
இப்படிக்கு
திருவாளர் பொதுஜனம்.