கங்கைப்பூவின் பூம்பொழில் வாசம்..
செங்கதிரோனின் பொன்னிறக்கரங்கள்
எங்கும் தொட்டிடா கங்கைப்பூவே
மங்கையர் பூவினில் மயங்கிடு தல்போல்
எம்கை கண்டதும் சிவந்திடும் பூவே
கொங்கை கண்ட குழவியைப் போல்தான்
உள்ளம் கவர்ந்த குங்குமப்பூவே..
தன்கை நம்பிய தரமிகு உழவன்
செங்கை வளர்த்த செம்மலர்ப் பொழிலே
கங்கைப் பூவே உன்னெழில் கண்டு
மயங்கி மகிழ்ந்தேன் நற்சுவை தாராய்..
உண்டிநல் நிறைந்த உன்மத்தன் போல்
கண்டுனை மகிழ்ந்தேன் கங்கைப்பூவே.
மண்டின நினைவினில் மயங்கியே மகிழ்ந்துனை
மாந்தித் திளைத்திட மயங்கிடும் மனதை
முண்டி யடித்தே முடக்கி னன்யான்
தண்மையின் அழகில் மடக்கினை பூவே
கொண்டு மகிழ்ந்துன் கோலம் கண்டிட
உண்டு திளைத்துன எழிலதைப் பருகிட
உன்வடி வழகினில் உருகிக்களித்திட
பண்டைய நாள்முதல் பரிதவித்தனன் யான்...!
சிறுகக் குழைந்தே சிற்றிதழ் சிவந்திட
நறுமணம் கொண்டே நாடியைக் கவர்ந்திட
குறுமுகை செவ்விதழ் குவிந்து சிரித்திட
சிறுநகை புரிந்துன் இதழதை சுவைத்திட
குறுகுறுத் திடுமென் குவிந்தநல் உதடும்
உன்னெழில் கண்டபின் ஊனினை மறந்தே
முன்னெதிர் வந்துன் சிந்திடும் தேன்மழை
சின்னதோர் தேர்வடம் சிறுவர்கை பட்டதும்
மின்னலாய் ஒளிர்ந்திடும் ஓரதிசயம் போல்
கன்னலே உன்மது என்மதி மயக்கிடும்..!