Tuesday, April 23, 2013

ஒரு கணம் சிந்திப்பாய்..!

ஒரு கணம் சிந்திப்பாய்...!

உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீ
கள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்

எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலே
தள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும் 

முள்மீது அமர்ந்த முதியவன் போல்நீ 
தள்ளாமை கொண்டே தடுமாறும் போதும்..

வெள்ளாமை இல்லாத உழவனைப் போல்நீ
உள்ளுக்குள் மாண்டு மருகிடும் போதும்..

புள்ளின இணையதை புலையவன் குத்திட
சுள்ளெனச் சுருண்டிடும் இணையதைப் போல்நீ

உள்ளிய தெல்லாம் உருக்குலை யும்நாள் 
தெள்ளிய நீரில் கற்களின் மோதலில் 

மெள்ளவே எழும்பிடும் வளையமாய் உன்மனம்
உள்ளிடும் என்னை தவிர்ப்பையோ அதனை..?