Thursday, July 5, 2012

எரிதழல் கொண்டுவா நீ..!

1.

தன்மானங் கெட்டுத் தறிகெட்டுச் சீரழிந்து
உன்மானம் போக்கிடும் சிங்களர்கள் - முன்னால்
விரிகூந்தல் பேரழகி கண்ணகியே இன்னோர் 
எரிதழல் கொண்டுவா நீ.



2.

தமிழ்மகனே யுந்தன் தரங்கெட்டுத் தாழ்ந்து 
உமிழ்கின்றா ரெச்சிலதை பாரில் - உமியளவும்
ஈவிரக்க மேதுமின்றிக் கொன்றழித்தார் இவ்வினத்தை
போவிது யுன்பெருமை சொல்.



3.

இன்றுங்கள் காலம்கை கொட்டியே ஆர்த்திடுவீர் 
நன்றாகச் செய்யுங்கள் நர்த்தனமும் - என்றேனும்
எங்களுக்கும் காலமுண்டு என்றேனும் சேர்ந்துதைப்போம்
சிங்களரே கூத்தாடு வீர்.




என் கல்லறைக்கான எழுத்துகள்..


இன்றுதான் 
இவன் 
கனவுகளின்றி  
உறங்குகின்றான்...!


முட்படுக்கையிலிருந்து
மண்படுக்கைக்கு 
மாறியிருக்கிறான்..!



தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!

Image



தன் நெஞ்சறிவது..புதிய கீதை..!

நெஞ்சறிய பொய்பேசி என்னபலன் கண்டாய்
வஞ்சனைகள் எண்ணி நீயும் என்ன சுகம் கண்டாய்
கொஞ்சமெனும் இறைவனுக்கு அஞ்சிநட வென்பேன்
நஞ்சமது நமைக்கொல்லும் நன்கறிவாய் நண்பா..!!


நான்குபேர்கள் சொன்னதாலே யாவும்உண்மையாமோ
தீங்குபல எண்ணுவதால் தீட்சை பெறுவாயோ
ஈங்குவந்து அவதரித்தோர் மெய்யதனை வென்றார்
தாங்குமிந்த பூசுழலும் மெய்யிலது நண்பா..!!


பட்டறிந்து முன்னோர் சொன்ன பத்துவித மெய்கள்
நட்டமில்லை நாமுணர்ந்து நாளும்கடை கொண்டால்
சட்டதிட்ட மல்லநம்மை சரணடையச் செய்ய‌
வட்டமிடும் நம்மனத்தின் சான்று பெரிதென்றோ..?


நட்புபேணில் அவ்விலக் கணமறிவாய் நன்றாய்
முட்புதராய் மண்டிநிற்கும் காழ்ப்புணர்வைக் கொல்வாய்
தட்பவெப்பம் கண்டுதானே மாவினமும் பெருக்கும்
நுட்பமதை நீயறிந்தால் நீயுயர்வாய் நண்பா..!!


சீற்றம்கொண்ட சிந்தனைகள் சீரழிக்கும் உன்னை
ஏற்றம்பெறும் வழியனைத்தும் ஏய்த்துவிடும் முன்னே
ஆற்றலென்ன வென்றபோதும் ஆர்மதிப்பர் உனையே
தூற்றலின்றி வேறுஏது தொடர்ந்துவரும் நண்பா..?


எந்தன் நெஞ்சில் ஏதுமில்லை என்றுகொள்ளு நீயும்
நொந்த மனம் தேற்றிநீயும் நோன்பில் மூழ்குவாயே
எந்தவிடம் உந்தன் நெஞ்சில் காயமாக்கும் என்றே
உந்தன் நெஞ்சைத் தேற்றிநீயும் தேறிடுவாய் நண்பா!!


மழலைக்கவிதையொன்று..!

Image


அழியாத கவிதையொன்று
அரங்கேறும் மன்றிலின்று..

மொழியெல்லாம் மலர்வாசம்
எழுத்தெல்லாம் மணம் வீசும்..

விழியின்றி கவர்ந்து நிற்கும்
விளக்கின்றி ஒளிகாட்டும்..

செழிப்பான கவிதையென்றே
செம்மையாய்ப் பெயரெடுக்கும்..

மழலைக் கவிதையன்றோ
மாறாத கவிதை என்றும்..!

உழலும் மனம் தேற்றும்
உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்

கழலணிந்து நடக்கையிலே
கவனமெல்லாம் கவர்ந்து நிற்கும்..

அழகையெல்லாம் அள்ளிவீசி
ஆனந்தம் அள்ளித்தரும்..