
நேற்று வரை
அன்புக்குரியோரின்
அழகான பரிசாய் இருந்தது
அந்த மலர்க்கொத்து..
இன்று வாடிவதங்கிக்
குப்பைத் தொட்டிக்குள்...
சிறுபிள்ளை சிலிர்த்து விளையாடிய
சிங்கப்பொம்மை
பல்லிழந்து காது தொங்கிப்போய்
பகட்டெல்லாம் உலர்ந்து போய்...
உடைந்த சாமான்களின்
உப்பரிகையில் இன்று..
காதலில் கனிந்து உருகி
கனவுகளுடன் வழங்கப்பட்ட
ராதை கண்ணன் அரவணைப்புச் சிலை
கையுடைந்து நிறம் மங்கி
செல்லரித்துச் சிதைந்த நிலையில்
களையவும் மனமின்றி காக்கவும் உணர்வின்றி
அட்டைப்பெட்டியில்
அடக்கமாய்க் காத்திருக்கும்..
பழைய சாமான்காரனின் வரவுக்காய்...
யார் சொன்னது மனித உணர்வுகள்
மகத்தானவை என்று...?