Monday, February 27, 2012

தம்பிக்கோர் தாலாட்டு..!

                  தம்பிக்கோர் தாலாட்டு..!





சிறுவனுனைத் தாலாட்ட வயதேதும் எனக்கில்லை
மறுதாயாய் உனை மீட்க வழியேதும் புரியவில்லை
குறுகுறுக்கு முன்பார்வை என்விழியை நனைக்குதடா
மறுபடியும் நம்தாயை இறைவனிடம் வேண்டிடடா..!


என்வயிறைப் பற்றிஎனக் கேதுமொரு கவலையில்லை
உன்வயிற்றின் தீயடங்க வழிவகையைத் தேடுகிறேன்
முன்னொருநாள் நமக்காகத் தாய்பட்ட விதமெல்லாம்
பின்னொருநாள் நான்படுவேன் அதுவரையில் பொறுத்திடுவாய்..!


தமக்கையாய் நான்வாழ தான்பிறந்தேன் இப்போதாய்
சுமக்கும்மடி என்னிடம்தான் சுகமுணர்ந்து உறங்கிடுவாய்
எம‌க்கெனவென் றிறைவனவன் இட்டதொரு உணவதனை 
நமக்கனுப்பி வைத்திடுவன் நம்பியதை நீயுறங்கு..!


வானதுவே கூறைய‌தாய் புவிப்படுக்கை மெத்தையதாய்
தேனடைகள் நிறைந்திருக்கும் மாமரமே மேடையதாய்
ஊனமதை மறந்துதினம் கூடிநிற்கும் முக்கால்நாய்
கானமதை வழங்கிநமைத் தாலாட்டும் பைங்கிளிகள்..!


என்பசியை மறந்திருக்க நான்பாடும் பாடலது
உன்பசியைத் தீர்த்துவிடு மென்றே நான்பாடுகிறேன்
எம்பசியைத் தம்பசியாய் நினைப்போர்கள் வரும்வரைக்கும்
நம்பசியை மறந்திடுவோம் நம்பியதை நீயுறங்கு..!

No comments:

Post a Comment