Thursday, March 1, 2012

நீதானா அது..?

நீதானா அது..?


என்னில் உருவாகி 
என்னுள் கருவாகி
என்னுள் சமைந்ததாய்
சொன்னது நீதானா அது..?

என் உயிரில் கலந்து
என்குருதியில் மிதந்து
எனக்குள் ஊக்குசக்தியாய்
இருந்தது நீதானா அது..?

என் முடிகலைந்தபோதும்
உலகமே புரண்டுபோனதாய்
ஒதுக்கி வைத்து அழகுபார்த்த
ஒரே ஒருத்தி நீதானா அது..?

சற்றே பின்னிய என்கால்கள்
கற்றையாய் என்னை வீழ்த்தியபோது
சட்டெனத்தாங்கி என்னை நிலைநிறுத்திய
பெண்மையும் நீதானா அது..?

வாழ்க்கையின் துரத்தலில் 
ஓடிக்களைத்த போதில்
வாட்டமாய் ஒத்தடம் தந்து
பாதங்கள் நீவியது நீதானா அது..?

என் அழகுக் கருப்பனின்
கண்மலர்கள்மேல் பனித்துளி
சோபனம் தரவில்லை என
சுண்டிவிட்டது நீதானா அது..?

விதியின் விபத்தினால் 
நம்பிக்கை இழந்தபின்
நம்பிக் கைகொடுத்த
நலம் விரும்பி நீதானா அது..?

சுழற்றி அடித்த சுனாமியில் 
சோர்ந்திடாமல் காத்து
ஆறுதல் படகோட்டிவந்து
அரவணைத்தது நீதானா அது..?

இன்று..

குறுகிய மலைப்பாதையில்
தவழ்ந்து முட்டிகள் பெயர்ந்து
அனாதைக்குழந்தையான எனக்கு
அறைகொடுத்தனுப்பியதும் நீதானா அது..?

எனில் சீசராகி நான் 
மண்ணில்விழுவதில்
மட்டற்ற மகிழ்ச்சியே..!

1 comment: