Saturday, December 1, 2012

என்ன வாழ்க்கை இது..?

என்ன வாழ்க்கை இது...? 

வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்.. 

எண்ணற்ற எதிரிகள் 
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்... 

விண்ணில் மிதப்பதாய் 
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..

கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...


’’ ஊதித் தள்ளியபின் 
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?

இன்றுந்தன் கண்ணெதிரில் 
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும் 
நன்றாய் அறுத்தெறிவாய்..’’


நன்றாய் முன்வந்து 
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..

No comments:

Post a Comment