Monday, February 18, 2013

கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!


கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!

கலைவேந்தன்


1.

சோராமல் எனைநோக்கித் தொழுதிடு முந்தனுடன்
சேராமல் இருந்திடக் கன்னெஞ்ச முண்டோசொல்
பேராயுதந் தனைத் தூர்த்திடு மென்வலிமை
மீராஉன் உருகுதலில் மாண்டது என்சகியே..!

2. 

எனைநாளும் நீதுதித்தாய் எனைநோக்கிக் கண்வளர்த்தாய்
முனைந்தோர்க் கெப்போதும் முறிவிலை நீயறிவாய்
முனைமுள்ளில் நடமாடும் பனித்துளி போல்நீதான் 
நினைத்தாயே உன்னருகில் நானுண்டு என்சகியே..!

3.

நல்லோர்க்கும் இல்லோர்க்கும் என்னாளும் குறையாமல்
வல்லமைக் கேற்றாற்போல் வாரியே வழங்கிடும்
நல்லூழின் உள்ளார்ந்த கருப்பொருளாய் யானுண்டு
நல்லோளே உன்னுடனே நானுண்டு என்சகியே..!

4.

கொற்றவனை உற்றவனாய் பெற்றவள்நீ யென்றாலும்
மற்றவர்தாம் பெற்றதொரு சிற்றுணர்வுப் பார்வையின்முன்
குற்றமாய்நீ கண்ணனை நினைந்தது நிலைத்ததனால்
அற்றையவர் நஞ்சுமதை நீயுண்டனை என்சகியே..!

5.

அஞ்சனையின் அன்புமகன் ஆண்டொருநாள் பெற்றதுபோல்
பஞ்சுமலர் மனமுடையாள் பெற்றிருந்தாய் உளவலிமை
மஞ்சுவது மறைத்ததனால் மறைந்திடுமோ ஆதவமும்
தஞ்சமென வந்தவளே நானுண்டு என்சகியே..!

6.

எந்தோளில் சாய்ந்திருந்தாய் உன்நிழலில் யானிருந்தேன்
செந்தாழை மடலதுவில் மணம்மறைந்த வண்ணம்
முந்தானை தனிலெனையே முடிந்துவைத்தாய் என்னவளே
தந்தேனு னக்கெனையே தாங்கிடுவாய் என்சகியே..!

7

சிற்றாடை யுடுத்தியுனை நல்லாடியில் ரசித்தனைநீ
அற்றைப் பொழுதுமுதல் பெற்றனை எனையுன்னுள்
கற்றைச் சிறுகுழலில் என்குழலும் சிக்கியதோ
எற்றைக்கும் நானுனக்கு எல்லாமே என்சகியே..!

8.

முற்றாயுனை யுணர்ந்து முழுமதியாய் ஆனபின்னர்
நற்றாயும் நல்லதொரு பாங்கியரும் ஆயினன்யான்
பற்றோடு எனைநினைந்து பாட்டினில் நீமகிழ்ந்தாய்
பெற்றாயே உன்தவத்தால் பெருமாட்டி என்சகியே..!

9.

சுற்றியெனைத் தொழுதுவர சுந்தரச் சேவகிகள் 
பற்றியெனைக் களித்திட பாவையர்கள் கோடிநிதம்
வற்றிடா ஊற்றெனவே வழங்கினர்தான் காதலினை
சிற்றிடையாள் நீஎனக்கு எப்போதும் என்சகியே..!

No comments:

Post a Comment