Tuesday, February 5, 2013

பாவம் ... அவன்..!


பாவம் .. அவன்..!

உன் புதுக்காதலனுடன்
உனது புது அனுபவங்களில்
நமது அனுபவங்களின் எச்சமிருக்கலாம்.

ஒருசில நெருடலான கணங்கள்
உனக்குள் எட்டிப்பார்த்திருக்கலாம்..

குதுகல நினைவுகளின் ஊடே
உன் பழைய கத்திக் குத்துகள்
மின்னலாய் வந்து போயிருக்கலாம்..

இனி
உனக்குள் உறுத்தல் வந்துபோக
அவசியமில்லை..

நமது முத்தங்களால் நைந்துபோன
எனது உதடுகளை
செப்பனிட்டுவிட்டேன்..

முதுகில் உறைந்த ரத்தத்துளிகளை
மீண்டும் துளிர்க்கவைத்துவிட்டேன்..

அட்டை போல் ஒட்டி இருந்த
உனது நினைவுகளை
ரத்தம் பீய்ச்சிட பிய்த்து எறிந்துவிட்டேன்.

உனது உரசல் இல்லாமல்
உயிர்க்கக் கற்றுவிட்டேன்.

தலையணையின் ஈரங்களை
பிரிவுக் கதிர்களால்
உலர்த்தியும் விட்டேன்.

நமது சங்கமக் குமிழ்களை
நைச்சியமாய் உடைத்தெறிந்துவிட்டேன்.

உன் புதுக்காதலனுக்கும் இந்த
புதுப்பித்துக்கொள்ளும் கலையைக்
கற்றுக்கொடுத்துவிடு..

பாவம்..

அவனாவது பிழைத்துப் போகட்டும்.

No comments:

Post a Comment