Wednesday, December 1, 2010

ஏன் பிறந்தேன் நான்...?



நான் உன்னைப் பெறும் முன்னே
நீ உன்னை மறைத்தாயே...


நீ என்னைப் பெறும்முன்னே 
என்னவெல்லாம் நினைத்தாயோ..?


என்னைப்பெற்றதும் நீ உலகம் இழந்தாய்..
உன்னைப்பெற்றதும் நான் உன்னை இழந்தேன்.
..

உலகெல்லாம் கண்ட உன்முகந்தான்
எனக்கு மட்டும் ஆகலையே அறிமுகந்தான்..!


ஊரெல்லாம் என்னைப் போற்றும் இன்றே
உன் பாராட்டு போலாமோ அவைநன்றே..?


துடிப்பால் உலகளந்தேன் ஆயினுமுன் 
மடிப்பால் உணர்ந்தறியேன்...


அடிதோறும் அடிகிடைக்கும் இந்நாளில் உன்
மடிதேடி அலைகின்றேன் அறிவாயோ தாயே நீ..?


என்னில் என்னை நான் முழுதாய் காணுமுன்னர்
உன்னை என்னிலிருந்து மறைத்தாயே தாயே..!


என்பிறந்த நாளெல்லாம் எண்ணிஎண்ணி ஏங்குகின்றேன்
ஏன்பிறந்தேன் உனை இழந்த இந்நாளை வெறுக்கின்றேன்..!

No comments:

Post a Comment