Thursday, June 12, 2008

தேன் துளிகள் ! பகுதி - 5

1.

மீளா உறக்கத்துடன் மேன்மையை அடைந்தாய்
வாளா இருந்த எம்மை வருந்தி யழச்செய்தாய்
தோளாய் நின்றாய் ஏழையர்தம் துன்பத்தில்
கோளாய் எமனுன்னை பிரித்தானே மன்னையாரே!

2.

தீக்குளிப்பர் மானிடரின் தோல்போர்த்தி அலைபவர்கள்
வாக்களிக்கக் கூட வகையாய் யோசிக்காது
ஏய்க்கப்பிறந்தவர்க்கே என்வாக்கு எனச்சொல்வார்
போக்கற்ற இம்மனிதர் பூமிக்கே பாரமென்பேன்!

3.

வாராது வருமென்று பார்த்திருந்தேன் நாள்தோறும்
சீராட்டி என்கேசம் சீர்குலைத்து -சீராக
என்னாசை என்நேசம் என்றெல்லாம் ஆதரித்து
சின்னதாய் காத்தாளென் தாய்

4.

உயர்த்தியவள் எனையிந்த சமுதாயத் தேரேற்றி
உயர்த்தி யவள் எனையீந்த தாயவளாய் மாறியவள்
உயர்த்தி யவள் செய்தளித்த பேருவகை மதிப்பினிலே
உயர்த்தியவள் பெருமை தோன்ற பாடிடுவேன் பாட்டினிலே!

5.

நானெனு மகந்தை யகற்றிடவே தினம்
தேனினு மினிய உன்நாம முரைத்தே
ஊனும் உறக்கமும் இன்றியே நாளும்
வான் புகழோனே உனை வணங்குவேன் நான் !

6.

தாயே நீதந்த முலைப்பால் மறக்கலையே
வாயமுதின் சுவை இன்னும் மாறவே இல்லையே
நீயேன் பறந்திட்டாய் எனைஇங்கே விட்டுவிட்டு
வாயேன் திரும்ப என்னை அமைதியாய் உறக்காட்டு!

7.

நான் உன்னை பார்த்தபோது நாலுவகை சொர்க்கம்
நாம் கூடிக் களித்த போதே நூறுவகை சொர்க்கம்
தேனொழுகும் பழச்சுவையை நான் சுவைத்தபோதோ
வானெல்லாம் நிறைந்துவிட்ட கோடிவகை சொர்க்கம்!

8.

பூக்களை நனைக்க ஒருபனித்துளி முயன்றதுபோல்
பாக்களை இயற்றிநான் பாரினைத்திருத்த நின்றேன்
மாக்களை மானிடராக்கவும் ஏலுமோ
சாக்கடை என்றும் சந்தனமாகுமோ?

9.

வேண்டாத ஒன்றினை வேண்டிக் கேட்டுநான்
தாண்டினேன் இறைவனின் விதிகளை - ஆண்டியாய்
ஊரெங்கும் அலைந்தபின் ஓர்நிலையும் உணராமல்
சீர்பெற வாடினேன் நான்.

10.

அறியாது போனேன் உன் அன்பை நானும்
உறிமீது விழுந்த பெருமத்து போல
குறிதவறிப் பட்ட குறும்பாடு போல் நான்
தறி கெட்டுவீழ்ந்தென் காப்பாற்றுவாயா?

11.

எந்நாளோ என்னுயிரை உனக்காய் அளிப்பதும்
அந்நாளோ உன்னிலே என்னை இழப்பதும்
உன்னால்தான் இனி இயங்கிடும் என்னுடல்
பொன்னாளே அது நான் உன்னை அணைப்பது!

12.

கவலைகள் களைந்திடு கார்முகில் கலைந்திடும்
திவலைப் பனித்துளி கதிர்கண்டு கரந்திடும்
உவகை கொள் உன்னை உலகம் அண்டிடும்
தவறு உணர்ந்தவர் வாழ்வும் செழித்திடும்!

13.

நானுண்டு எனச்சொல்வான் நகைத்து முகம்குவிப்பான்
தேனுண்டோ சுவைத்திட நாக்கு வரளுதென்பான்
வெண்ணெய் திரண்டதே வழித்து எடுஎன்பான்
மண்ணை உண்டவன் என்னையும் உண்டானே!

14.

பண்பாடு மறக்காத பெண்பாவை கண்டேன்
எண்குணத் தாளாயவள் விளங்கிடக் கண்டென்
உண்மையா யவள்தாயாய் மாறிடக் கண்டேன்
தண்குணத் தாளையென் தோழியாய்க் கொண்டேன்!

No comments:

Post a Comment