Thursday, June 12, 2008

தேன் துளிகள் ! பகுதி - 1

1.

நிறைபவ னென்றே நினைத்தேன் என்னை
உறைபவ னாகிடத் துடித்தேன் உன்னுள்
சிறையிட என்னை அளித்தேன் உனக்குள்
குறையில் லாதவன் அல்லன் யானே!

2.

சந்தேகமே பொசுக்கிவிடும் உன்தேகமே என்றுணர்
வந்தே எரிக்கும் உன் வாழ்வை நீ அறி
சந்தமுள்ள வாழ்வை அழித்தெரியும் கண்டுணர்
சொந்தங்களும் சேராமல் சோகம் வரும் தெளி!

3.

கொன்றுவிடு உன்னுள் உறங்கும் கோபந்தனை
வென்றுவிடு மனதின் காமவி காரந்தனை
மென்றுவிடு உன்னுள் உயிர்க்கும் கோரந்தனை!
சென்றுவிடு ஆழமாய் ஓமெனும் ஒலியினில்!

4.

மதுசூதனா மனதை மயக்கும் மணிவண்ணா
இது சரியா உன் லீலைதகுமா என் மன்னா
பொதுவில் வந்தென்னைக் களவு செய்ய
இதயம் வைத்ததென்ன சொல்லடா கண்ணா!

5.

காத்தாயே டாக்டர் என்னை நீ
கடும்நோய்ப்பிணியிலிருந்தே!
சீத்தாவை அனுமான் தசகண்டன்
சீண்டாமல் காத்ததைப்போல்!
தேத்தியெ விட்டாய் என்னை
தேரைப் போல் இருந்தேன் நானே
காத்திட்டாய் என்னை நீயே
தேரைப்போல் மாற்றி னாயே!

6.

சிகரத்திலேறி முகவரி தேடு!
சிந்தனைமுழுதும் சிவப்பினை ஏற்று!
நிந்தனை இன்றி வாழ்ந்திடப்பாரு!
நிலவினைத்தொடலாம் கைகளை உயர்த்து!

7.

தரணியதில் தைரியந்தான் வழிநடத்தும் உன்னை!
பரபரப்பாய் பேசவைக்கும் உன்வியக்கும் செயல்கள்!
சாந்தமுடன் விவேகமுந்தான் வெல்லவைக்கும் உன்னை!
பாந்தமுடன் பேசு உனது வார்த்தைகளே வெல்லும்!

8.

சூன்யமாய் உள்ளே நுழைந்ததன் பின்னர்நீ
வானளவு உள்ளில் வளர்ந்ததும் தேனாய்
இனித்திடும் அன்புரைகள் வாரிவழங்கி என்னை
நுனிமுதல் கால்வரை மாற்றினாய் நீ!

9.

ஏதுஇடம் இல்லாதவனுக் கிவ்வுலகில் என்றும்
போதுவதை சீருடன் நீதிரட்டு அல்லாது
சூதுவாதின்றியே நீயிருப்பின் எல்லோரும்
ஊதியே தள்ளிடுவார் பார்!

10.

முத்தான வரிகள் முழுமையாய் போட்டு
சத்தான சுவையுடன் சந்தங்கள் சேர்த்து
வித்தான கருத்துக்கள் பலவும் சேர்த்து
கொத்தான கவிதை படைத்தோமே இன்று!

No comments:

Post a Comment