Thursday, June 12, 2008

தேன் துளிகள் ! பகுதி - 3

1.

காலம் வந்ததே காத்திருந்த கணங்கள் போய்....
நாடெங்கும் மறுமலர்ச்சிக் குரல்கள் ஒலிக்குதே
இளைஞரின் எழுச்சியும் நம்பிக்கை ஊட்டுதே...
வீடெங்கும் நம்பிக்கை விளக்கினை ஏற்றிடு!

2.

நான் செய்யும் வேலையால் நீமகிழ வேண்டும்
தேன் போன்ற சொல்லால் உன் புகழபாட வேண்டும்
கூன்பிறை நெற்றியில் முத்தமிட வேண்டும்
ஏனெனில் நீதானே நான் வணங்கும் அன்னை!

3.

என்றும் உன்னையே எண்ணத்தில் வைத்தேன்..!
ஒன்றும் அறியா மனதுடன் இருந்தேன்...!
என்றும் நிலையிலா உடலினைத் துறப்பேன்...!
அன்றும் ஆவியாய் உனையே நினைப்பேன்!

4.

அச்சொல் உன்னைச் சுட்டதா அன்பே
உன்மனம் சுட்டதோ ஊமைக் காயமோ?
என் மனம் மயங்கிக் கூறினேன் அதனை
மனந்தனில் வைத்திடவேண்டாம் கண்ணே!

5.

குருச்சேத்திரப்போருக்கு மீண்டும் ஆயத்தமாகு
தெருவெங்கும் படைகுமி;வீரர்களைத் தயாராக்கு.
குருவும்சரி சிஷ்யனும்சரி எல்லோரும் எதிரிகளே
உருவாக்கு புதுக்கீதை எதிரிகளை தரையாக்கு!

---வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களின் புதிய பாரதம்!

6.

அன்பாலே கொல்வதாலோ ஆதரித்து அணைப்பதாலோ
என்பையும் உருக்கியே என்னிடம் கரைவதாலோ
பண்பைப் பெருக்கியே பாசம் பொழிவதாலோ
உண்மை அன்பினால் எனைஉரு வாக்கினாயோ

7.

ஊக்க மது தந்தாயோ நீயெனக்கு
ஊக்கமது அளித்தாயோ என்கவிதைக்கு
ஊக்கம் அது வந்தபின் தான் நானும்
ஊக்கம் அதுபற்றிப் பாடலானேன்!

8.

அன்பாய் அணைத்து நடப்பீரே மானிரே
வம்புக்கதை பேசிப்பேசி வாழ்ந்த கதைபோதும்
துன்பத்தின் போதுமட்டும் எமைஇங்கு பூசிப்பீர்
செம்பளவு நீரிலே வாழ்ந்திடுமோ இவ்வுலகம்?

9.

அடைந்திடு மனமே அரனவன் சரணதை
உடைந்திடு முனது உளக்கு மையல்கள்
படைபல வரினும் பயமிலை தொழுது
கிடைத்திடில் அவனது அருளினி சுகமே!

10.

துணை வருவாயோ எந்தன் உயிரே
இணை பிரியாமல் எனைச் சேர்வாயோ
பிணை யாய் இருவரும் பிடியுண்டோமே
கணை இட்ட காமன் களிக்கின்றானே!

No comments:

Post a Comment