Thursday, June 12, 2008

தேன் துளிகள் ! பகுதி - 2

1.

நிலைத்திருக்கும் இறையதனை எண்ணிடாமல் ஏன்மனிதா
கலைந்துவிடும் கனவுகளைக் கைக்கொண்டாய் சொல்மனிதா
நிலைகுலையும் எண்ணங்களை விட்டொழித்து நீயும்தான்
விலையிலா வாழ்வறங்கள் கைக்கொள்வாய் நீமனிதா!

2.

உண்டென்று சொல்வார் சிலர் இல்லென்பார்
கண்டவருமிலர் அதை விண்டியோருமிலர்
சிவனென்பார் சிலர் விஷ்ணுவென்பார் சிலர்
அவனன்றி அசையாது ஏதும்இது உண்மையே!

3.

செல்கிறதே என்னுயிர் என்னை விட்டே பிரிந்து
மெல்லமெல்ல அடங்கிடும் என் மூச்சு திரிந்து
சொல்லும் அற்றுப்போய் செயலும் மிகஒடுங்கி
வெல்லும் என்றுமே மரணந்தான் உணர்மனமே!

4.

எதுவென்று நீநினைத்தாய் அதுவாக அத்தனவன்
புதுமைகள் பலபுரிவான் புன்னகையால் ஆட்கொள்வான்
பதுமைபோல் அவன்முன்நீ பண்ணிசை பாடிடுவாய்
ததும்பாமல் அவனருள்தான் தந்திடுவான் கைகூப்பு!

5.

செயலினாலே மனம்புனிதம் ஆகும் கண்டீர்
முயற்சியாலே தான்முடியும் எல்லாம் காண்பீர்
துயரம் யாவும் தீர்ந்துபோகும் கடும்உழைப்பால்
வியனம் யாவும் முடியுமென்றும் அவன்அருளால்!

6.

காப்போம் கயவரின் கண்ணியிலிருந்து
கண்மணி போலே நம் நாட்டை
நல்லோர் போற்ற வாழ்ந்திடு நாளும்
சொல்லும் செயலும் ஒன்றென்றிரு!
வல்லோர் வைத்தது சட்டமென்றே
வாழ்ந்தது போதும் மாற்றிடுவோம்!

7.

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துபார் என்றும்
செயலிலும் சொல்லிலும் ஒன்றென - கையகத்தில்
தீஞ்சொற்கள் இன்றியே நாளும் மகிழ்ந்திரு
பூஞ்சோலை யாகும் உலகு.

8.

குணங்களால் அனைவரையும் வென்று
கணங்களில் அன்பினைப் பிழிந்துதந்து
மனங்கவரும் மாண்பினைப் பெற்று
சினங்குறைந்து வாழ்வோம் வாரீர்!

9.

எண்ணங்களே நம்விதைகள் - விதைப்போம்!
எழுச்சிகளே நம் கனவுகள் - கதைப்போம்!
தவறுகளே நம் முன்னேற்றப்படிகள் - மிதிப்போம்!
வெளிச்சங்களே நம் விதிகள் - உதிப்போம்!

10.

திரும்பி வந்து சேர்ந்திடடி போனசுவ டறியாமல
விரும்பித்தானே வந்தடைந்தாய் முன்னர்நீயும் இப்போது
கரும்புச்சொற்கள் கசந்ததுமேன்? கனவெல்லாம் கலைந்ததுஏன்?
இரும்பு நெஞ்சத்தாளே இளகிடுவாய் நீயும் கொஞ்சம்!

No comments:

Post a Comment