Thursday, June 12, 2008

காலம் கடந்த ஞானம்

நீண்டகால சோகமொன்றைப்
பகிர்ந்துகொள்ளப்போகிறேன்...
மாண்டவர்கள் மீண்டகதை
பறையடிக்கப் போகிறேன்...
ஆண்டான் அடிமை என்றதொரு
அவலம் சொல்லப் பொகிறேன்..
வேண்டிப்பெற்ற சாபமொன்றின்
சோகம் சொல்லப்போகிறேன்..

காந்தியென்ற மனிதர் சொன்ன
உண்மை பொய்யாய்ப் போனதே
சாந்தி சமாதானமெல்லாம்
காற்றில் பறக்கலானதே...
மாந்தரெல்லாம் மாக்களாகி
மானம் இழக்கலானதே...
வேந்தராட்சி போனபின்னும்
வேங்கைவேட்டை வாட்டுதே!

இல்லறங்கள் செழிக்கவேண்டி
இலக்கியங்கள் சொன்னதும்
நல்லறங்கள் தழைக்கவேண்டி
நல்லவர்கள் நவின்றதும்
சொல்ல முடியாதபடி
சோர்ந்து போகலானதே
வெல்லவழிகள் ஏதுமின்றி
வேதனைகள் வாட்டுதே!


புவி தழைக்க புதிய நீதி
நாளை வந்து சேருமோ
தவிக்கும் ஏழைவர்க்கமும்
தாகம் தீர்ந்து உயிர்க்குமோ
கவிகள் பாடி உலகையே
கரைகள் ஏற்ற முடியுமோ?
செவிகள் குளிர ஏழ்மை மறைந்த
செய்தி கேட்க இயலுமோ?

No comments:

Post a Comment