Thursday, June 12, 2008

தேன் துளிகள் ! பகுதி - 4

1.

தரவேண்டும் மணவிலக்கு புரியாத மகளிருக்கு
சிரமமே இல்லாமல் மனவிலக்கு வந்தபின்னர்
வரவினும் கூடுதல் செலவென்றே ஆனபின்னர்
பரதேசம் போவதிலே மகிழ்வுண்டு கணவனுக்கு!

2.

காத்திடுவான் என் கண்ணன் எப்போதும் என்னையே
பூத்திடுவான் மத்தாப்பாய் புன்னகைக்கும் போதெல்லாம்
சோர்ந்திட்ட போதெல்லாம் சொற்களால் வருடியே
கோர்வையாய்ப் பேசியே கவர்ந்திடுவான் என் மனதை!

3.

கொண்டுவந்தவன் இங்கு விட்டுப் போவதும் தான் என்ன?
வந்து சேர்ந்த மனிதரெல்லாம் அனுபவித்தது என்ன?
உடுத்ததுணியும் உருவிக்கிட்டு எரித்துப்போகும் உறவு!
படுத்து மீண்டும் நீ எழுந்தா நன்றி சொல்லு இறைக்கு!

4.

நான் என்ற அகந்தை தான் ராவணனை கொன்றது!
வாளெடுத்து வீசியோரும் மண்ணிலே புதைந்தனர்!
பேணியதோர் அன்பும் நல்லதோர் நம்பிக்கையும்
தோள்கொடுத்து நட்பையே வளர்த்திடுமே நீஅறிவாய்!

5.

புதுமையிது என்றெண்ணிக் குழம்புகிறேன் நானும்
பதுமையாய் நான் மாறி பகரவும் ஓர் வார்த்தையின்றி
இது என்ன அதிசயம் என்றெண்ணி மயங்குகிறேன்
எதுவேண்டாம் என்றாயோ அதுவேண்டிக் கலங்குவதேன்?
மது உண்டு மயங்குதல் போல் மனதுக்குள் மறுகுவதேன்?

6.

வந்தது வசந்தமென கொண்டதொரு களிப்பும்
சந்தமுடன் கலந்துநறு மணம் பரப்பும் கவியும்
இந்திரனும் ஏங்கிவிடும் ஏந்திழையின் வனப்பும்
சிந்தைதனை மயக்கிவிடும் விந்தைஎன்ன சொல்வேன்?!

7.

பெருகவே உள்ளமது உள்ளும் வண்ணம்
சிறுகவே உண்டியது சிறுத்தைப் போலே
கருகவே மனதினில் காழ்ப் புணர்ச்சி
வருகவே வாழ்வினில் இன்பம் என்றும்!

8.

கண்ணனவன் அருளினிலே களித்திருப்போம் வாருங்கள்
கருணைமிகக் கொண்டவனாம் கார்மேக வள்ளலவன்
திண்ணமுடன் காத்திருந்து தேன்சுவையாய் வாய்மொழிந்து
அருள்வழங்கும் மன்னனவன் ஆட்கொண்டான் எனையணைத்தே!

9.

துணை நின்றாய் தூணாய் என்மனம் சரியும்போது
இணையின்றி எனைக்காத்தாய் எளிதினில் மறக்கிலேனே
உனையன்றி வேறுருவம் உலகினில் காண்கிலேனே
நினையன்றி வேறாரோ எனைக்காப்பார் சொல்கண்ணா!

10.

நீயில்லா உயிரதுவும் மதிப்புளதோ இவ்வுலகில்
தாயினைப்போல் வாரியள்ளி எனையணைத்து முத்தமிட்டு
நோய்தீர்க்கும் அருமருந்தாய் அன்பான சொல்சொல்லி
வாய்நிறைய புகழ்ந்தென்னை வாழவைப்பாய் என் தேவி!

No comments:

Post a Comment