Sunday, May 25, 2008

கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!



கலைவேந்தனின்.....மீராவின் கண்ணன்!


1.
ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!

2.
என்றாவது உன்னுள் கலந்திடத் தானே
என்றன் உயிரைக் கையகம் வைத்தேன்
இன்றோ நாளையோ இடறாமல் நீயும்
நன்றே வந்து நகையாட்டு கண்ணா!

3.
நீயாகப் பேசாமல் புன்னகைத் தாலும்
ஓயாமல் உன்னை பாராட்டு வேனே
வாயாற நீயும் வாழ்த்திடு வாயே
சேயாக என்னை சீராட்டு கண்ணா!

4.
துயிலாடும் போதென் துகிலாடு மென்று
துணைகாக்க உன்னை தருவாயென் றெண்ணி
துயில்துறந் தென்றும்உன் வழிபார்த்து நின்றேன்
தூயவனே என்மாயவனே எனைகாத்திடு கண்ணா!

5.
தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
பாராமுகம் ஏனோ பார்த்திடு கண்ணா!

6.
பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய்
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய்
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!

7.
பார்த்தனின் மயக்கம் தெளிவித் தவனே
தேர்தனை வலித்து தேர்வித தவனே
ஓர்முறையேனும் என்னருகில் வா
மார்பகம் புதைந்துன் மனம்மகிழ் கண்ணா!

8.
பூவிதழ் உந்தன் பூமணம் காண
தாவியுன் செவ்விதழ் சுவைத்திட ஏங்கும்
பாவியென் பாவம் தொலைத்தெனை ஏந்தியே
ஓவிய மாயுறைந் திடவா கண்ணா!

9.
உந்தன் ஓர்முத்தம் பெறவேண்டி நானும்
எந்தன் ஓர்ஜென்மம் இழப்பேனே கண்ணா!
சிந்தும் ஓர்முத்து இதழமுதம் என்றும்
எந்தன் ஓராயுள் காத்திருக்கும் கண்ணா!

10.
கண்ணாடி முன்நின்று பார்த்தே உன்னைப்
பெண்ணாக நான் மாற்றினேனே! நானும்
நீயாக மாறித்தான் போனேன் என்றும்
சேயாக என்னோடு வாழாயோ கண்ணா!

11.
ஆயர் பாடியில் வாழ்ந்திட்ட போதும்
மாயப் போர்வைகள் போர்த்திட்டபோதும்
வேயப் புல்லாங் குழலூதும் போதும்
தூயன் உன்மீதென் காதலென்றுமே கண்ணா!

12.
உலகமே என்னைக் கூறுஇட்ட போதும்
கலகமே செய்தென்னைக் கொன்றிட்டபோதும்
விலகவே சொல்லியே விலங்கிட்டபோதும்
நிலைமாற மாட்டேனே நீங்கேனே கண்ணா!

13.
என்மேனி காத்தது பசலை என்றும்
உன்மேனி தழுவவே உருகினேன் என்னை
தின்னாலும் மண்ணுக்கு தரமாட்டேன் உயிரை
உன்னுடைமை என்றுமே என்னுயிர் கண்ணா!

14.
காதலர் என்றே பலபேரும் சொல்லியே
பாதக காமமே கலந்திட வந்தார்
சோதனை என்றே எத்தனை வந்திடினும்
நாதனே உன்சரண் அடைவேனே கண்ணா!

15.
கட்டாய மென்னுடன் புரிந்திட்ட போதிலும்
சுட்டாலும் என்மேனி பட்டாலும் புண்பல
விட்டாலும் சிறையில் ஏறுடன் தனித்துமே
தட்டாமல் உன்னுடனே கலப்பேனே கண்ணா!

16.
வேதமே மூலமாம் சான்றோர்க்கு என்றென்றும்
சாதமே தெய்வமாம் ஏழைகளுக் கென்றென்றும்
பாதமே கடவுளின் பகதருக் கென்றென்றும்
நாதனே நீயேஎனக் கென்றென்றும் கண்ணா!

17.
தலைசீவிப் பூச்சூட்டும் போதும் மாய
நிலைகாட்டும் கண்ணாடி முன்நின்ற போதும்
குலையாமல் உடையணியும் போதும் உந்தன்
விலையிலா மெய்க்காதல் உணர்கிறேன் கண்ணா!

18.
நடக்கின்ற போதும்உன் நினைவு மஞ்சத்தில்
கிடக்கின்ற போதும்உன் உணர்வு உணவு
படைக்கின்ற போதும்உன் கனவு மரணம்
கிடைக்கின்ற போதும்உன் நினைவுதான் கண்ணா!

19.
நீராடும் போதென் உடலினைத் தழுவிடும்
நீராக நீமாறித் தழுவிட வேண்டும்
சீராக நீவந்து சிக்கெடுக்க வேண்டும்
போராடும் என் கூந்தல் உனக்காக கண்ணா!

20.
நீயூட்ட வாராமல் எந்தன் உணவும்
சேயூட்ட இல்லாத தாய் போல நானும்
தாயூட்ட வாராத சேய் போல நீயும்
ஓயாத போராட்டம் ஏனின்று கண்ணா!

21.
வழிப்பாதை எதிர்பார்த்து நானும் என்றும்
விழிப்போர்வை விரித்திட்டேன் உனக்காக மன்னா!
எழில்கூடும் உன்னுதல் என்றென்றும் என்னை
விழிமூட மறந்திடச் செய்திடும் கண்ணா!

22.
குழந்தையாய் நீ பேசும் போதும் என்னை
மழலையால் தாலாட்டும்போதும் என்றும்
நிழலைப்போல் நீஎன்னைத் தொடர்ந்திட்ட போதும்
பழங்கண்ட மந்தியின் நிலைகொண்டேன் கண்ணா!

23.
ஒருபார்வை உனதென்னைக் கொல்லும் மறுபார்வை
திரும்பவும் உயிர்ப்பிக்கும் இதுவென்ன மாயம்
இரும்பினை கவர்ந்திழுக்கும் காந்தமாய் நீயும்
துரும்பினைப் போலவே நானுமாய் கண்ணா!

24.
நீயாட நான்பாட வேண்டும் சிலநேரம்
ஓயாமல் நீபாடவேண்டும் மயங்கியே
தீயாட்டம் போல்நானும் சதிராட்டம் போட்டு
தேயாத நிலா உன்மேல் விழவேண்டும் கண்ணா!

25.
முகம்வாடி நான் சோர்ந்த போதும் எந்தன்
அகம்வாடி தணலின்மேல் துடித்திடும் போதும்
முகம் தாங்கி என்னையுன் மடிமீது போட்டு
இகம்தாங்கும் பூதேவி போல்காப்பாய் கண்ணா!

26.
இப்புவியை நீங்கிட நான் நினைத்தாலும்
தப்பென்று சொல்லிநீ தடுத்திடு கண்ணா!
எப்போதும் என்னருகில் நீ இருந்தென்னை
தப்பாமல் என்னைநீ காப்பாயா கண்ணா?

27.
நீராடி என்கூந்தல் சிக்கெடுக்கும் போதும்
சீராடிஎன்னுடலை மணமூட்டும்போதும்
ஓராடி முன்நின்று எனைப்பார்க்கும் போதும்
போராடிஉனை விரட்டி உடுத்துவேன் கண்ணா!

28.
உன்பட்டுக் கன்னத்தில் ஓர்முத்தம் பதித்து
மென்பட்டு உதட்டினில் மெல்லமாய் மோதியே
கண்பட்டுப் போகுமுன் கண்ணோட்டம் கழித்து
என்பட்டு உள்ளத்தில் மகிழ்வேனே கண்ணா!

29.
மாறாத அன்பும் மன்னிக்கும பண்பும்
மீறாத சொல்லும் மேம்பட்ட செயலும்
கூராக என்னைக் குத்திடும் பார்வை
மீராவாம் என்னை மயக்குதே கண்ணா!

30.
சுந்தரப் பார்வையால் சுண்டியிழுத் தென்னை
வந்தும யக்கியே வாத்சல்ய மாய்ப்பேசி
நந்த கோபாலனே என்நாயகனே நீயும்
எந்தன் மனம்கவர்ந்தாயே கண்ணா!

31.
மோகனப் புன்னகை யால்சுண்டி யேஎன்னை
மேக வண்ணனே நீயும் மயக்கினாய்
வேகமாய் வந்து உள்ளம் கவர்ந்தாய்
தாகம் தீர்த்தென்னையே ஆட்கொள்வாய் கண்ணா!

32.
நாகத்தின் மீதுன் நர்த்தனம் கண்டே
சோகம் தீர்த்தனர் தேவர்கள் அன்று
மோகம் கொண்டுன் மேல்பாய்ந்தனர் கோபியர்
யோகமே வேண்டினேன் நானுன்னை கண்ணா!

33.
சற்றே தலை சாய்த்து சிரித்திடுவாய் அழகாக
உற்றுநோக்கி கண்ணிமைத்து ஓர்நொடியில் எனைஉருக்கி
குற்றம்புரிந்தவன் போல்நீயுன் முகம் வைத்து
பற்றிலா தவன்போல்எனைப் பார்த்திடுவாய் கண்ணா!

34.
அன்பாய்ப்பேசியே அரவணைப்பாய் அக்கறையாய்
என்பும் உருக்கிடும் உன்பாசப் பொழிவினில்தான்
முன்பே மயங்கினேன் முறுவலில் மெய்மறந்தேன்
உன்பேர் சொல்லியே உறஙகுகிறேன் கண்ணா!

35.
பஞ்சுபோல் உன்கன்னம் பட்டுபோன்ற உன்மார்பு
மஞ்சுபடர் மலைபோல நீலவண்ணம் உன்மேனி
தஞ்சமென வந்தோரைத் தாங்கிடும் தாயுள்ளம்
வஞ்சமிலா வாளிப்பு எனைமயக்கி விடும்கண்ணா!

36.
தாய்போல வந்தாய் எனைத் தோள்தாங்கி நின்றாய்
வாய்பேசிப் பேசியே வாழ்த்திட்டாய் நீஎன்றும்
மாய்மாலம் செய்திடும் இப்புவியில் இருந்தென்னை
தூய்மையுள்ளத்தோனேஎனைத் துணைகொள்வாய்கண்ணா!

37.
எத்தனை சோதனை நீவைத்த போதினும்
அத்தனை காதல் பெருகுதே உன்மேல்
அத்தனைச் சுற்றிடும் பித்தனைப் போலவே
முத்தனை உன்முகம் மறக்கிலேன் கண்ணா!

38.
ராதையை உன்னருகில் பாதியாய் வைத்தாய்
பாதை யறியா புள்ளிமான் போலவே
பேதையாம் என்னையும் உன்னருகே ஓரமாய்
கீதையின் நாயகா சேர்த்துக்கொள் கண்ணா!

39.
கோபியர் பலருண்டு போற்றிடவே உன்னை
பாபியரு முன்னை போற்றிடக் கண்டேன்
தாபத்தில் மகளிரும் சுற்றினர் உன்னையே
கோபாலா உன்மேல் உயிர்வைத்தேன் கண்ணா!

40
சாதனை செய்யும் சாதகன் நீயே
போதனை செய்யும் கீதையும் நீயே
வேதனை தீர்க்கும் வேதமும் நீயே
சா தனை போக்கும் கடவுளே கண்ணா!

41.
என்றும்உன் நலம் காணத்துடிக்கிறேன் நானும்
கன்றினைக் காத்திடும் தாய்ப்பசு போலவே
ஒன்றுமே நேராமல் காத்திடுவேன் உன்னை
அன்றியும் வேறேதும் பணியுண்டோ கண்ணா!

42.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந் தென்னை
காப்பிட்டு காத்திடும் காதலன் நீயே
பூப்போல என்றுமே பேதை நான் உன்னை
காழ்ப்பின்றி காத்திடுவேன் கார்வண்ணக் கண்ணா!

43.
சோர்ந்து சுருங்கியே சோகமாய் நானும்
கார்மழை போலவே கண்ணீரில் மூழ்கினேன்
கூர்ந்து நோக்கியும் குளிர்நகை பூட்டியும்
சேர்ந்தே என்னுடன் சிரிப்பாயே கண்ணா!

44.
ஊனுறக்கம் இன்றியே உன்னினைவில் நானும்
தேனுக்குள் விழுந்திட்ட உன்மத்த வண்டு போல்
வான்மதி கண்டலரும் வண்ணமிகு அல்லிபோல்
நான்உன்னைக் கண்டதும் மலர்கிறேன் கண்ணா!

45.
எத்தனை அலட்சியங்கள் நீ செய்த போதிலும்
அததனை அன்பென் மனதிலே ஊறிடும்!
பித்தி என் கனவுகள் கைகூடா தொழிந்திடினும்
அத்தன் உனை மறவா பக்தை நான் கண்ணா!

46
அம்மையுமாய் அத்தனுமாய் ஆசிதரும் ஆசானாய்
இம்மையும் மறுமையும் இன்மையாக்கும் இறைவனாய்
செம்மையும் வழங்கும்நல் அரசனாய் என்றும் நீ
எம்மையும் நீங்காது இருப்பாயோ கண்ணா?

47.
உன்னையே வழிநோக்கி உருகினேன் நானும்
என்னையே இழந்துநான் உன்னிலே கலந்திட்டேன்
பொன்னையும் பொருளையும் வேண்டிலேன் என்றுமே
என்னையும் கைவிடல் கூடுமோ கண்ணா!

48.
ஆயிரம் கோபியர் ஆர்ப்பரிப்பர் உன்மேன்மை
வாய்நிறைய உச்சரிப்பர் உன்நாமம் என்றும்
ஆயினும் என்னுயிராய் உன்னையே என்றுமே
சாயினும் வாழினும் ஏற்றிருப்பேன் கண்ணா!

49.
நீ சிரிக்க புன்னகை தொற்றிக் கொள்ளும்
பூ விரிக்க மணம்பரப்பும் முல்லைபோலே ;
தாய் சிரிக்க தாவி வரும் குழந்தை போல
தூயவனே நீ சிரிக்க மகிழ்வேன் கண்ணா!

50.
சந்தோஷக் கணங்களிலும் உன் நினைவே என்றும்
என் தோஷக் கணங்களிலும் உந்தன் எண்ணம்
சிந்தனை முழுவதிலும் வியாபிக்கும் உன்னுருவம்
வந்தெனை அணைத்திடவே அருள்வாயே கண்ணா!

51.
நாமமுனை அனுதினமும் செப்பிடுவேன் தளராமல்
காமனும் தானெனைக் கொல்ல அம்பெய்த போதும்
சோமனும்தான் குளிர்விக்க வந்த போதும் உந்தன்
தாமரைப் பாதந்தனை விடுகிலேனே கண்ணா!

52.
காழ்ப்புடன் நம்காதல் மனங்களைப் பிரிக்கவே
தீப்புண்ணாய் வார்த்தைகள் கொட்டிடும் போதும்,
வேப்பெனப் பார்வைகள் கசந்திட்ட போதுமே
காப்பாய் நம் காதலை கார்மேகக் கண்ணா!

53.
கனவுலகில் நீஎன்றும் எனை யணைத்தாய்
நனவுலகில் உனைக் காணக் காத்திருந்தேன்
எனதாக்கி உனைத் தழுவத் துடித்திருந்தேன்
மனமாளும் மாதவனே வாராய் கண்ணா!

54.
சித்திரத்தில் உனை என்றும் கண்டிருக்க
பித்தியாய் உனைக் காணத் தவமிருந்தேன்
சித்திரை வெய்யிலில் கடுமழையாய் நீயும்
முத்துதிரும் சிரிப்புடனே முகிழ்த்தாய் கண்ணா!

55.
உனைக்கண்ட நேரமென் சிந்தை தன்னில்
பனைவெல்லம் ருசிகண்ட மந்தி போலே
தனைமறந்த உன்மத்தம் ஊறக் கண்டேன்
எனையாண்டு எடுத்தணைக்க வாராய் கண்ணா!

56.
சித்திரத்தில் நான் கண்ட கண்ணன் தானோ
சித்தமெலாம் நிறைந்திருந்த மாயன் தானோ
முத்தமிட நான் துடித்த மன்னன் தானோ
பித்தாகி அணைத்திடுவேன் வாராய் கண்ணா!

57.
நான் வாழ ஆதாரம் நீதான் என்றும்
மான் வாழா தம்மிணைதான் மரித்துப்போயின்
தேனூறும் அதரத்தால் முத்தம் தந்து
வான்போல எனை நீயும் காப்பாய் கண்ணா!

58.
மின்னிணைப்பு தந்துவிட்ட பதுமை போலே
உன்னணைப்பு என்றென்றும் என்னைக் காக்கும்
பின்னணைத்து பின்கழுத்து முகர்ந்தாய் நீயும்
என்னினைவு இழந்துவிட்டேன் ஏற்பாய் கண்ணா!

59.
என்மார்பைத் தொட்டணைத்து மகிழ்ந்த போதும்
உன் மார்பை எனக்கரணாய் அளித்தபோதும்
உன் கைகள் என்கூந்தல் அளையும்போதும்
மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தேன் கண்ணா!

60.
ஈருடலும் ஓருடலாய் கலந்த போதும்
தேர்போன்று என்னிடையில் தவழ்ந்தபோதும்
சீராய் நீ காது மடல் வருடும் போதும்
ஓர்மூச்சாய் உன்மூச்சில் கலந்தேன் கண்ணா!

61.
உன்னருகில் நானுரசி நின்ற போதும்
என்னிதழில் நீஉரசி மகிழ்ந்த போதும்
மின்னணுவில் ஓர் மாற்றம் கண்டாற்போல
சின்னதோர் பூகம்பம் உணர்ந்தேன் கண்ணா!

62.
உன் மடியில் எனை யமர்த்தி மகிழ்ந்த போது
பின்முடியில் ஓர்கற்றை உன்மேல் தழுவி
என்மனம்தான் குளிர்ந்துபோய் குலுங்கும் வண்ணம்
உனை இம்சைசெய்தாலும் மகிழ்ந்தாய் கண்ணா!

63.
வானில்லா நிலவாம் நான் நீயில்லாமல்
தேனில்லா மலராய் நான்தேய்ந்தே போவேன்
ஊனின்றி கூட நான் வாழ்ந்திருப்பேன்
நான் வாழ உன்மூச்சு தேவை கண்ணா!

64.
ஓர்நாள் நான் உன்மடியில் துயின்ற போது
கார்மேகம் கலைந்துவந்து கவிழ்ந்தாற் போல
போர்முகத்தில் வெற்றிகண்ட மன்னன் போல
ஆர்ப்பரித்தேன் அகமகிழ்ந்தேன் அழகுக் கண்ணா!

65.
ஓராசை என் மனதில் என்றும் கொண்டேன்
நேராக உனைத்தூக்கி இடுப்பில் வைக்க
பேராசைஎன்றே நான் காத்திருந்தேன்
சீராசை என்றேநீ வந்தாய் கண்ணா!

66.
கண்ணாலே உன்னுருவம் காணும்போது
கண்ணுக்குள் உனைவைக்க முயற்சி செய்தேன்
கண்ணெதிரே நீயின்றி வாடும்போது
கண்ணுக்குள் உன்னுருவம் கண்டேன் கண்ணா!

67.
எழிலூற்றாய் எனக்காய் நீ காட்சியளிப்பாய்
விழிநிறைய உன்னுருவம் பருகித்திளைப்பேன்!
குழலூதிநீ மறைந்தபோது அழுது நிற்பேன்
தழலினில் துடிக்குமெனை காப்பாய் கண்ணா!

68.
மோகமாய் புன்னகைத்து வசமாக்கி கோபியரை
வேகமாய் களித்து நீ விளையாட்டு காட்டுகையில்
தாகமாய் வந்தமான் வறண்டகுளம் கண்டதுபோல்
சோகமாய் ஏங்கிநான் பார்த்திருப்பேன் உனைகண்ணா!

69.
எனக்காய் நீ என்றாவாய் எனைமட்டும் கொஞ்சிடுவாய்
எனக்காத்து ஏங்குகின்றேன் என் குறை நீதீர்ப்பாயா
உனக்காய் மட்டுமே உயிருடனே காத்திருப்பேன்
மனக்காயம் தனைதுடைத்து எனைக்காப்பாய் என்கண்ணா!

70.
கோடைவெயிலுக்குப் பின்வரும் மழைபோல் நீ
வாடிநிற்கும் எனைமீட்க ஓடியே வருவாயா?
வாடைக்காற்றிலே வாட்டமுற்ற மலர்போல் நான்
ஓடிவந்தெனை காத்து உயிர்ப்பிப் பாயா கண்ணா!

71.
பாராமுக முந்தன் எனதுயிரை துடிக்கவைக்கும்
சேராதுன் மனதை சேய்பசியால் துடிப்பதுபோல்
நீராவிவெயில்பட்டு மறைவதுபோல் தவிக்கின்றேன்
நாராயணனாம்உன் அடிமையன்றோ நான்கண்ணா!

72.
கொஞ்சமாய் நீ பேசி முகம் நோக்க விலை எனினும்
வஞ்சமே இன்றி நான் வலம்வருவேன் உனைஎன்றும்
தஞ்சமே நானென்றும் உன்னன்பு மடியணைப்பில்
நெஞ்சம் நிறைய உனை காதலிப்பேன் கண்ணா!

73.
மாசில்லாமனத்துடன்தான்மன்னவனேஉனைநினைத்தேன்
காசில்லா இதயமிது கருணை செய் கார்முகிலா
நேசமது நான் வைத்தேன் நாகுழறி பேசிவிட்டேன்
பாசமுடன் எனை மன்னித் தருள்வாயா நீகண்ணா?

74.
இத்தனை பாராமுகம் என்னுயிரை உருக்கிடுமே
அத்தன் உனை யன்றி ஆர்பாதம் தொழுதிடுவேன்
பித்தனைப்போல்உன்காலைப்பற்றி நின்றேன்மன்னவனே
முத்தனைய பல்லழகா மன்னித்திடு எனைகண்ணா!

75.
உன்னினைவே எனைநாளும் உயிரூட்டி வாழவைக்கும்
என்னுயிரும் உடலுமுனை அனுதினமும் ஏங்கி நிற்கும்
தன்னினைவே இன்றிஉனை எந்நாளும் போற்றுகின்றேன்
மன்னவனே எனைஏற்று மகிழ்விப்பாய் என்கண்ணா!

1 comment:

  1. கண்ணனுடன் பக்தியுடன் கை கோர்த்து மனம் உருகி பாடிய
    பாமாலைகளை படித்து பார்த்ததில்லை
    ஆனால் இதோ இந்த மீராவின் கண்ணனின் ஒவ்வொரு வரிகளும் மனதை உருக்குகிறது..... என்ன சொல்வேன்.... மீராவின் பக்தி கண்ணனை எட்டியதா?? கண்ணன் மீராவின் காதல் கேட்டு உருகினானா?இதோ இந்த மீராவின் கண்ணன் படித்தால் அதற்குரிய பதில்.. தன்னலம் பாராது இறையிடம் பக்தி கலந்த காதல் கொண்ட மீராவின் அன்பை என்னவென்று சொல்வது??
    மிக மிக அருமை கலை...

    ---------- மஞ்சு

    ReplyDelete