Sunday, May 25, 2008

உன் மடியில் மரித்துவிட ஆசை...!

உன் மடியில் மரித்துவிட ஆசை...!


என்னை கலைத்துவிடேன் என்று
அலைபாயும் உன் உச்சி முகர்ந்துவிட ஆசை...!

பரபரவெனும் குறும்பு பார்வையால்
எனை அளக்கும் உன் கண்களை
என் கண்களால் அணைத்துக்கொள்ள ஆசை...!

கோபத்தில் சிவக்கும் உன் மூக்குநுனியில்
செல்லக்கடி கடித்து முத்தமிட ஆசை...!

படபடவென பொரியும் வார்த்தைகளின் இடையில்
மூச்சுத்திணற நீ அறியாது உன்னை கட்டிக்கொள்ள ஆசை...!

உன் காதுமடல்களை வலிக்காமல்
மெதுவாய் உரசி மெல்ல கடித்துவிட ஆசை...!

என்னை ஆதரவாய் அணைக்கும் உன்
கைகளுக்குள் என்னை அமிழ்த்திவிட ஆசை...!

ரேகை அழிந்த உன் பட்டுக்கைகளில் என்
கன்னத்தை தாங்கிக்கொள்ள ஆசை...!

உன் கண்ணுக்குள் கனவாய் மலர்ந்துவிட ஆசை...!
உன் கண்ணுக்கு இமையாய் இருந்துவிட ஆசை...!

உன் காயங்களுக்கெல்லாம் மருந்தாய் மாறிவிட ஆசை...!
உதிரமாய் உன் நரம்புகளில் புது ஊற்றென ஓட ஆசை...!

உன் மனதை மெல்ல மயிலிறகால் வருடிவிட ஆசை...!
உயிராய் உன்மூச்சுக்காற்றில் கலந்துவிட ஆசை...!

உன் அழகுப்புன்னகையில் ஒரே ஒரு துளி அன்பிற்காய்
உன்னிடமே என்னை மொத்தமாய் விற்றுவிட ஆசை...!

என் இறுதி மூச்சு காற்றில் கரைய
உன் மடியில் மரித்துவிட ஆசை...!

No comments:

Post a Comment