Monday, January 18, 2010

அவர்களும் வாழட்டுமே...

படிப்பறி வின்றிதினம் பரிதவிப்போர் நிலைமாற‌
துடித்தெழுந்து இளையரெலாம் துவக்கிவைக்க வேணும்
இடித்துரைத்தும் இனியதாய் எடுத்தியம்பி யும்தினமும்
விடிவுபெறும் நற்கல்வி விளக்கேத்த வேணும்.

இருட்டறையை நொந்துநிதம் இடிந்துபோய் நிற்பதினும்
விருப்புடனே ஓர்விளக்கு ஏற்றி வைக்க வேணும்
பொருட்டெனவே பொலிவிழந்த ஏழைகளையும் நினைந்து
செருக்கின்றி நற்செல்வம் செலவழிக்க வேணும்.

நல்லதொரு மனிதஇனம் நலிவடையா திருந்திடவே
பல்வகையில் முயற்சிதனை பகிர்ந்தளிக்க வேணும்
செல்லாக் காசெனவே செழிப்பிழந்த மனிதக்குளம்
வல்லோரால் தூர்நீங்கித் தூய்மை பெறவேணும்.

வலியோரால் வள‌மிழந்த எளியோரின் வாழ்வுநிலை
புலிவாயில் போய்விடாம‌ல் புதுப்பிக்கப் ப‌ட‌வேணும்
மெலிந்தோரும் மேன்மைபெற ஓருறுதி எடுத்துநாமும்
ஒலிஒளியாய் அவ‌ர்வாழ்வை மாற்றி வைக்க‌ வேணும்.

1 comment: