Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 10 ( நிறைவுப் பகுதி )


நிறைவுப்பகுதி


நாளும் தேய்ந்தே நலிந்தது குயிலும்
யாரும் இல்லை காக்கவும் உயிரை
குரல்வளை நெரிந்தது குதூகலம் இழந்தது..
இதயம் வலித்தது முகமும் வெளிர்ந்தது..
களையும் இழந்தது கலையும் இழந்தது
குரலும் குழறியே கூக்குரலானது..

வனவாசகர்கள் வழிமறந்து போயினர்..
பணவரவும் தவளைக்கு குறைந்தது..
நல்லோர் வாழ்ந்தால் நச்சிடும் உறவினர்
இல்லாராகில் எச்சிலாய் மதிப்பரே..
இன்னிசைக் குயிலின் இம்சையும் கூடி
முன்னிசை யானது ஓர் பெரும் கனவாய்..
ஆயினும் பாராட்டும் கைத்தட்டலுமே
ஆகின குயிலின் ஏக்கங்களாகவே..!

குயிலின் நிலையதைக் கண்டும் தவளையோ
இல்லாதவளை இம்சிக்கும் காமுகனாய்
பொல்லாதவை சொல்லி புறமதில் தாக்கியது..
‘’ முட்டாள் பறவையே முடிந்தது உன்கதை
உடல்வனப்பிருந்தால் உடனிருப்பர் காமுகர்
வனப்பிழந்தவளோ வறுமையில் ஏகுவள்
சினமிகும் முன் சீர்செய் உன்குரல்.
பிணமாகிடுவாய் பின்விளைவிதுதான்..! ‘’

நான்கு காமுகர் கையகப்பட்ட
நனி இளம்பெண்ணாய்ச் சிலிர்த்தனள் குயிலாள்
இழப்பினை எண்ணி சுவாசம் மறந்தது குயிலும்
எங்கோ நரம்புகள் வெடித்தன..ஐயகோ
செங்கோலோச்சிய குயில்
துறந்தது இன்னுயிர்..
துடித்துத் துடித்து அடங்கியது உயிரும்..!

சற்றும் இரங்கா தவளையும்
குற்றம் தன்னது இல்லையென
சுற்றிலுமிருந்த கூட்டத்தில் உரைத்தது..
‘’ என்ன தான் செய்வது நானும் சொல்க..
முட்டாள் குயிலது முடிந்தவரை முயன்றேன்
அதீத நடுக்கம்.. அதீத இயலாமை
அதிதிகள் மனதை மயக்கவல்லாமல்
அநியாயமாக இறந்தது..
சுயமாகச் சிந்திக்க இயலாதகுயிலது
உயரம் என்னது என்னை எட்டுமோ..?’’

ஆங்காரம் மிகுந்த அத்தவளையும்
ஆங்கே அரசு நடாத்தியதே..
அவ்வனம் சென்றீரென்றால்
அம்மண்டூகம் இன்னும் அங்கே
இசையாய்ப்பொழிவதைக் கேட்பீர் நன்றே..
வசையது பற்றிக் கவலையும் இல்லை
வாழ்க்கையைப்பற்றிய நியதியும் இல்லை..
கூர்ந்து பார்ப்பீர் அக்கம்பக்கம்..
ஓராயிரம் தவளைகள் உங்கள் பக்கம்..!


No comments:

Post a Comment