Tuesday, April 10, 2012

பெண்பாவைக்காய் ஒரு வெண்பா மாலை..

1.

முன்பார்வை யொன்றினில் நோயுற்றேன் பின்னருன்
வன்பார்வை யொன்றினில் வாடினேன் - உன்பார்வை
செய்திட்ட மாயங்கள் கொஞ்சமில்லை என்னுயிரே
மெய்தொட்டுச் சென்றிடவே வா.



2.

உன்னாலே நானுயிர்த்தேன் உன்னாலே தான்ஜனனம் 
உன்னால்தான் சாவெனி லென்வரமே - உன்னையான்
கண்ணாலே பார்த்தாலே கன்றுபோல் துள்ளிடுவேன்
கண்மையுன் ஓரணுவாய் நான்.



3.

அறிந்திடேன் உன்னுள்ளம் ஆய்ந்திடேன் சித்தம்
எறிபந்து பாய்ந்திடு மன்ன - குறிநோக்கி
தீப்பரவும் வேகமதில் உன்னன்பில் என்னுயிரே
மூப்புவரை வாழ்ந்திடுவேன் நான்.



4.

நின்றேன் நெடுமரமாய் நானும் உவகையுடன்
ஒன்றேன் இனிஉலகில் எப்பொழுதும் - நன்றே
உனையெண்ணி வாழ்ந்திடுவேன் நாள்தோறும் அன்பே
பனைமரத்தின் வண்டென நான்.



5.

வாராது வந்தவளைப் பார்த்திருந்தேன் நாள்தோறும்
சீராட்டி என்கேசம் சீர்குலைத்து - சீராக
என்னாசை என்நேசம் என்றெல்லாம் ஆதரித்து
சின்னதாய் காத்தாளென் தாய்.



6.

போவேனோ நீங்கி உனைவிட்டு தூரமாய்
சாவேனோ நான்வழி தான்மறந்து - ஆவேனோ
நோயாலோ தீயாலோ வல்வினையின் நாவாலோ
போயினும் ஓர்ப்பேன் உனை.



7.

காத்திடுவா ளென்னன்னை எப்போது மேயென்னை
பூத்திடுவா ளோர்மத்தாப் பாயென்னை - ஆர்த்தேயான்
சோர்ந்திட்ட போதெல்லாம் சொற்கவரி வீசியவள்
சேர்த்திடுவாள் நெஞ்சில் நிதம்.





8.

காத்திருக் கின்றேனுன் கண்பார்த் தலுக்கென
பூத்திருக்கு மென்கண்கள் உன்விழி - போர்த்தலுக்காய்
நொந்தவிந் தேயான் நொறுங்கி விடும்முன்னர் 
வந்தணைப் பாயென் சகி.



9

அதிர்ந்து உரைத்திடாள் ஆர்ப்பரித்தே கூவாள்
முதிர்ந்த தொருமனமும் தன்னில் - உதிர்ந்து 
அழிந்திடாமல் சீர்பெறவும் தன்மகவை நாளும்
விழித்திருந்து காத்திருப்பாள் பெண்.


10.


உண்மை புறத்தொதுக்கி ஊர்ப்பேச்சில் தான்மயங்கி
தண்மை இழந்தே தரங்கெட்டு - பெண்மையதன்
சீர்கெட்டுப் பேரிழந்து போயதாய பெண்ணினத்தால்
ஊர்கெட்டுப் போகும் அறி.


No comments:

Post a Comment