Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 4


பகுதி 4


அடுத்த நாளிரவு..
அனைவரின் உற்சாகம் மீண்டும் பொங்கவே
குயிலும் தன் தலையசைத்து
சந்தோஷத்தில் வாலசைத்து
ஒருகண் மூடி இறகுகள் சிலிர்த்து
தொன்டையைக் கனைத்து
தொடங்கியது இசையை..

அப்போதுதான்
தன் கரகரக்குரலால் குயிலின்
இசைத்தவத்தைக் கலைத்தது தவளை..

தனது குறுகிய குகையில் உடலைமறைத்து
தலைமட்டும் நீட்டியது தவளை
வஞ்சக மனிதன்
நெஞ்சகம் மறைத்து
கொஞ்சிய குரலில்
குழைவது போல
சிண்டுகள் முடிய முனைவது போல‌
மண்டூகம் தனது
மவுனம் கலைத்தது..
மந்தமாய்க் கனைத்தது..!

சாகசம் அறியா மழலைக்குரலில்
குயிலும் வியந்து கேட்டது..
'' ஏதும் சொல்ல எத்தனமோ..?
பேதம் எதுவும் கண்டீரோ குரலில்..?
சாதகக்குறைவோ..? சங்கீதப்பிழையோ..?
ஏதுவாகினும் மனந்திறப்பாய்..''
என்றது குயிலும்
வலையில் வீழ்ந்திட
வசமாய் நின்றது..!

வாக்குக்கேட்கும் வஞ்சக அரசியல்வாதி
வாஞ்சையாய் மொழிவதுபோல்தான்
பலியாக்கும் ஆட்டின்
நலம்விசாரிக்கும் தொனிதான்..
நகை கேட்கும் நங்கைபோல்தான்..
சிகை கலைத்துக் கூறியது தவளை..
'' இம்மரத்தின் சொந்தக்காரன்..
இவ்வனத்தின் நல்லிணக்க தலைவன்
நாளும் மகிழ்விக்கும் நல்லவன் நான் தான்..
செவ்வையாய் இசைத்து
இவ்வனம் காக்கிறேன்..
நேற்றுமுதல் உன் சத்தமும் கேட்கிறேன்..
என் இன்குரல்தான் இங்கே
பலருக்கு பூபாளம்..
என் இசைக்கரம்தான் இங்கே
சிலருக்கு சிகைகோதும்..
என்னால் இங்கே
அனைவரும் மலர்கின்றனர்..
நேற்றுமுதல் ஏனோ
அனைவரும் அலறுகின்றனர்..''
என்ற
தவளையின் சூசக வாசகங்கள்
கவலையின் குழியில்
அழுத்தின குயிலை..!!


No comments:

Post a Comment