Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 7


பகுதி 7














பிறரைக்கெடுக்குமுன் வஞ்சகமாய் நடித்தல்
பிறப்பே அவருக்காய் என்பதாகச்சொல்லுதல்
உறவைக் கொடுத்து உயிரை எடுத்தல்
துறவறம் பூண்டாற்போலவே நடத்தல்
இவையாவும் வஞ்சகர்க் குணங்களாம்..

தயவு செய்தாற்போல்
இயல்பாய் நடித்த அத்தவளையோ
பயிற்சிக்கு கட்டணம் கட்டாயம் உண்டு..
பிறருக்கெனில் ஆயிரக்கணக்கில்
உறவானாய் உனக்கோ சற்றே குறைவு
கறாராய்ப்பேசி கச்சிதமாய் நடித்தது..!

ஏமாறப்பிறந்த எத்தனையோ பிறவிகள்
தேடினில் வையகம் முழுவதும் உண்டே..
குயிலின் இயல்பு தவளையின் நடிப்பில்
உயிரை வதைக்கப்போவது அறியாமல்
உடனே ஏற்றது தவளையின் ஆலோசனை..

ஊக்குவிக்க ஒருவர் கிடைத்தபின்
உற்சாகக் கவிமழை பொழிவதைப்போல்
பெற்றோரின் அனுமதி கிடைத்த காதலர்போல்
உற்றதோர் நம்பிக்கை ஊற்றுப்பெருக்கெடுக்க‌
கற்றதனைத்தும் காட்டியது குயிலும்..

தொட்டனைத்தூறும் தூயதோர் கேணிபோல்
கட்டுக்கோப்புடன் கானம் பொழிந்தது..
தொலைதூர விலங்குகள் தூரம் தொலைத்தன‌
அலையலையாய் ஓடிவந்து ஆரவாரம் செய்தன..
கலையழகு மிக்கதோர் இசையமுது புசித்தன..

வந்த விலங்கினங்களிடம் வஞ்சகத்தவளையும்
சந்தம் கேட்டிட சந்தா கேட்டது..
சொந்தம் என் மரம் சொந்தம் என்குயில்
வந்தவர்க்கெல்லாம் கானவிருந்துக்காய்
தந்தே தீருக தனமழைபொழிக என்றே
தந்திர தவளையும் சுரண்டியது செல்வமதை..!

No comments:

Post a Comment