Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 3


பகுதி ‍ 3






















அந்த ஆலமரமே
ஓர் இசைக்கோயிலானது.
அந்தக் குயில் அங்கே தாலாட்டப்பட்டது..
நாராச ஒலிகளால் நரகங்கண்டவர்கள்
நவரச இசைவிருந்தில்
பரவசம் பெற்றனர்..

தாயின்மடியில் தனைமறந்து உறங்கின‌
நேற்றுவரை அடம்பிடித்த
குட்டிக்குரங்குகள்..
ஒரு
புனிதத்தல வருகையாய்
ஒவ்வொரு விலங்கும்
அந்த ஆலமரத்தில்கூடி
தம்மை புனர்வசந்தத்தில்
புதுப்பித்துக் கொண்டன..
குயிலின் இசை நிறைவடைந்த
ஒவ்வொருமுறையும்
கைத்தட்டுகளால் அந்த
காடே அதிர்ந்தது..

இதுதான் கீதமென்று
கீதைமேல் கைவைக்காமல்
கிச்சுக்கிச்சின கிளிகள்..

தொலைதூரத்திலிருந்து
அலையலையாய் ஊர்ந்து
ஆலமரத்தின்கீழ் கூடிய‌வாத்துகள்
வாத் வாத்தெனும் வாழ்த்தொலிகளால்
குயிலை நனைத்தன..

ஏகாந்த இசையில் எப்போதுமிருந்து
ஏங்கிய குயிலுக்கோ
ஏகோபித்த வாழ்த்துகள்
புதுமையாய் தோன்றின..

மீண்டும் மீண்டும் தன் குரல்வீணையை
மீட்டியது அக்குயில்..
விடிந்ததும் தெரியவில்லை.
விளக்குவைத்ததும் புரியவில்லை..
புரிந்தது என்னமோ அங்கே
குயிலின் இசை நர்த்தனம் மட்டுமே..!

No comments:

Post a Comment