Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 9


பகுதி 9













ஓய்விலா இசையால் குரலும்
பேய்மழைப் பொழிவால் உடலும்
தேய்ந்து போய் வாடியது பாவம்..
ஓய்வும் உறக்கமும்
கெஞ்சின போதும்
தவளையின் தூண்டல்
அங்கே கூடிய கூட்டத்தின் வேண்டல்
மேலும் மேலும் குயிலை
பாடிட வைத்தது..ஆம் .. வாடிட வைத்தது..

வனத்தின் பன்முனை விலங்குகள் பலவும்
கனம் கனமாய் உணர்ந்தன இசையை..
நாட்பட நாட்பட‌
கனமழையும் கான மழையும்
குறையவும் இல்லை.
விலங்குகள் பலவரவால்
தவளையின் பணவரவும்
பல்கிப்பெருகின..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறைகள்
சொல்லிச்சொல்லியே குதறியது தவளை..
எவ்விதத்திலும் மறுப்புரை கூறா
செவ்விய குயிலும் தேய்ந்தது நாட்பட..
ஒவ்வா நிலையில் தேய்ந்தது குரலும்..
தவளையும் சளைக்காமல் கூறியது குறையும்.

'' இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
என்னுடைய குரலைக் கவனித்தாயா..?
எத்தனை வலிமை எத்தனை இனிமை..?
அத்தனை திறமை உனக்கும் வேண்டும்..
கடந்திட்ட இரவில் கனத்தது உன்குரல்
இடைப்பட்ட இசையில் பிசிறடித்தது காண்..
குரல் ஏன் நடுக்கம்..? இசை ஏன் ஒடுக்கம்..?
இன்னும் பயிற்சிகள் தேவை உனக்கு..
உனக்கான வாசகர் கூட்டம் பெரிது
ஆயினும் பயிற்சிகள் குறைவே உனக்கு..
இன்னும் திறமைகள் வேண்டும் உனக்கு..
எனது பயிற்சிக்கட்டணம் இன்னும்
உனது கணக்கில் செலவில் இருக்கு..''

இரக்கமற்ற தவளை குயிலின் குரல்வளை
நெரித்தது மேலும் .. மேலும் ... மேலும்..!

No comments:

Post a Comment